Nature - இயற்கைப் பதிவுகள்

காட்டை பற்றி சிந்தித்தால் நாட்டின் நலன் கூடும்.காடு நம் பழைய வீடு,உயிரினங்களின் வாழ்விடம்.!

Thursday, October 4, 2012

காட்டுயிர் வார விழா


                       18 ஆம் நூற்றாண்டுக்கு பின் இப்பூமியில் மூன்றில் ஒரு பங்கு இயற்கை வளங்கள் மனிதர்களின் வசதிகளுக்கும், பேராசைகளுக்கும் மெல்ல இரையாகி, இன்றைக்கு மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 100 ஆண்டுகளில் அழிந்து போன உயிரினங்களும், அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களும் பட்டியலில் இடம் பிடித்தன. பல்லுரியம் சிதைக்கப்பட்டது, பல்வேறு பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றது. தாவர இனங்களும், தாது பொருட்களும் சூறையாடப்பட்டு கொண்டு இருக்கின்றது. எல்லா உயிரினங்களுக்கும் வீடாக இருந்த இப்பூமி, மனிதன் என்ற ஒரு உயிரினத்தின் ஆதிக்கத்தால், பேராசையால் இயற்கை சமநிலை சீர்கெட்டு, சீரழிந்து வருகிறது.


           இயற்கை வளம் அழிய தொடங்கிய பின், வளமான மண் சீர்கெட்டு, நீர்நிலைகள் மாசுபட்டு இன்றைக்கு உலகில் பல கோடி மக்கள் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கும், ஊட்டசத்து குறைபாட்டினால் நோய்களுக்கு எதிராகவும் போராடி வருகின்றனர். உலக வெப்பமயமாதல், எரிபொருள் பற்றாகுறை, பருவநிலை மாற்றம் போன்ற காரணிகள் ஏற்படுவதற்கு இயற்கை சமநிலை குலைந்ததே காரணம். இப்பூமியின் பாதுகாப்பு குறித்தும், சுற்றுசூழல்,காட்டுயிர் மற்றும் பல்லுரியம் பற்றிய முக்கியத்துவம் குறித்தும் மேற்கத்திய அறிஞர்கள் கவலைப்பட தொடங்கினர். இன்று வரை சுற்றுசூழல் இயற்கை மற்றும் காட்டுயிர் குறித்த நுட்பமான தகவல்களும், சிந்தனைகளும் நாம் அங்கிருந்து தான் பெற வேண்டியுள்ளது.
               நம் நாட்டை பொறுத்தவரையில் தொழில், வர்த்தகம், அரசியல், சினிமா, இலக்கியம் போன்றவைகளுக்கு தரும் முக்கியத்துவம், இயற்கை, காட்டுயிர், சுற்றுசூழல் சார்ந்த நிகழ்வுகளுக்கு நமது சக்தி வாய்ந்த ஊடகங்கள் அக்கறை கொள்வதே இல்லை. நம் உயிர்மண்டலத்தின், உயிர் பிரச்சனைகளில் ஊடகங்கள் உண்மைகளை அலட்சியப்படுதுகின்றன. சினிமாவுக்கும், நடிகர், நடிகைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இயற்கைக்கும், காட்டுயிர்களுக்கும் கொடுக்கப்படுவதில்லை.    
             சங்ககாலத்தில் உயிரின சூழலில், இயற்கையோடு இயைந்து, நாரையை தூது விட்டு, புலியை பூனை போல் அருகில் வாழவைத்து, யானையை மாடு போல் வேளாண்மைக்கு பயன்படுத்திய நமது மரபு எங்கே போயிற்று?  நமது மரபு சார்ந்த இயற்கை அறிவியலை மீட்டெடுத்து, மண்ணையும், மணிநீரையும், காற்றையும், காட்டுயிரையும் காப்பாற்ற அக்டோபர் காட்டுயிர் வார விழாவை கொண்டாடுவோம், விழிப்புணர்வை உண்டாக்குவோம்.  

Saturday, August 25, 2012

கருங் கழுகு (Black Eagle)





கடந்த மாதம்  இயற்கை நண்பர் ஓம் பிரகாஷ் உடன், கோத்தகிரிக்கு அருகே உள்ள குஞ்சபனை காட்டிற்கு, கானுலா சென்று இருந்தோம். பல்வேறு பறவைகளை பார்த்தோம், குறிப்பாக அடர்ந்த கானகத்தில் மட்டுமே காணப்படும் கருங் கழுகு (Black Eagle) எங்களுக்கு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் நாட்டு கழுகுகளில் கருங் கழுகு பெரியது, சுமார் 75 செ.மீ நீளமுள்ளது.   இக்கழுகு சிறு பறவைகளையும், ஓணான், பாம்பு,அரணை போன்ற ஊர்வனவற்றையும், பறவைகளின் முட்டை, பறவைக் குஞ்சுகள் போன்றவற்றையும்  வேட்டையாடி உண்ணும். இக் கழுகு இருக்கும் காட்டில், இதன் உணவுக்கான உயிரினங்கள் சிறப்பாக வாழ்கிறது என்று இயற்கை அறிவியல் கூறுகிறது. இயற்கை சமன் பாட்டை நிலை நிறுத்துவதில் கழுகுகளின் பங்களிப்பு சிறப்பானது,கருங் கழுகுகளின் சிறப்பும்,அதன் வாழ்வியலும், இயற்கை சமன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
                                      கருங் கழுகுகளின் சிறப்பை கேட்டு அறிந்த Times of India நிருபர் திருமதி சாந்தா தியாகராஜன்   அவர்கள், எங்களிடம் பேட்டி எடுத்தார். செய்தி கடந்த 20-8-2012 அன்று Times of India வில் செய்தியாக வெளி வந்தது.  

Friday, May 11, 2012

பறவைகளை பார்த்தல் (Bird Watching)


பறவைகளை பார்த்தல் (Bird Watching) மனதிற்கு மகிழ்ச்சியையும், அறிவிற்கு விருந்தாகவும் அமைகின்ற நிகழ்ச்சி. பறவைகளை பார்க்கின்ற பழக்கம் நம்மிடம் பெரும்பான்மையோரிடம் இல்லை. ஆனால் நம்மை சுற்றி 1330 வகை தொகை பறவைகள் இந்திய துணை கண்டத்திலும், தமிழகத்தில்
300 க்கும் மேற்பட்ட பறவைகளும் இருக்கின்றன. நகர் புறத்தில், நாம் வாழும் பகுதியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட வகைகளையும் (species) , கிராம புறம் என்றால் 30 க்கும் மேற்பட்ட வகைகளை சாதாரணமாக பார்க்க முடியும். நம் மக்களில் எத்தனை பேருக்கு ஆர்வம் இருக்கிறது? மற்ற பொழுது போக்கு அம்சங்களில் கவனத்தை செலுத்தும் நாம், இயற்கையான பறவைகளை பார்த்தல் விசயத்தில் அக்கறை செலுத்துவதில்லை. மனதிற்கும் மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் உண்டாக்கும் இது போன்ற இயற்கையான பொழுது போக்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் மனபூர்வமாக ஈடுபட்டால் தான், இயற்கை பற்றியான பிரச்சனைகளில் பொது அறிவு உண்டாகும், சுற்று சூழல் பிரச்சனைகளில் தீர்வு ஏற்படும்.

     

  

Thursday, April 19, 2012

சிறுத்தை என்ன குற்றம் செய்தது?

“கொலை வாளினை எடுடா கொடும் செயல் புரிவோர் அறவேஎன்று புரட்சி கவிஞர் பாடினார். படத்தை பாருங்கள் ‘கொடும் செயல் புரிவோர் கொலை வாளினை கையில் வைத்திருக்கிறார்களே என்ன செய்வது? இந்த கொலைகாரர்களிடம் சிறு குழந்தையை போல, சிறுத்தை சிக்கியிருக்கிறதே? என்ன குற்றம் செய்தது? ஏன் இந்த கொலை வெறி?

பூனை குடும்பத்தில் புலியை விட சிறுத்தை வலிமை குறைந்தது என்றாலும் தன் இரையை வேட்டையாடும் போது நெடும் பாய்ச்சல் பாயும் ஆற்றல் பெற்றது. சிறுத்தை எளிதில் மரம் ஏறக்கூடியது. அழகிய செம்பழுப்பு மஞ்சள் உடலில் கருப்பு புள்ளிகளுடன் கலந்து கவர்ச்சியுடன் காணப்படும் சிறுத்தை, மனிதர்களுடான மோதலில் சிக்கி இன்றைக்கு பல இடங்களில் கூண்டு வைத்து பிடிக்கப்படும் விலங்குகளில் சிறுத்தை முதலிடம் வைக்கிறது .சிறுத்தைகள் வாழும் இடங்களில் மனிதர்கள் ஆக்ரமிப்பு செய்ததும்,காடுகளை அழித்து தோட்டங்களை உருவாக்கியதும்,அங்கு கால்நடைகளை வளர்ப்பதும் தான்,மனிதர்களுக்கும்,சிறுத்தைகளுக்கும் மோதல் ஏற்பட மூல காரணம். மனிதர்களுடன் மோதிய உயிரினங்கள் வெற்றி அடைந்ததாக வரலாறு இல்லை.இனி எதிர்காலத்தில்(விரைவில்)சிறுத்தைகள் அழிந்து வரும் பட்டியலில் விரைந்து இடம் பிடிக்கும் என நம்பபடுகிறது.

காட்டுத்தீ


நம் மக்களில் பெரும்பாலானோர் காட்டுத்தீ என்றவுடனே அது காட்டுக்குள் மூங்கிலோடு மூங்கில் உரசி தீப்பிடிப்பதாக நம்புகின்றனர். நம் நாட்டு காட்டுத்தீ அனைத்தும் மனிதர்களால் வைக்கப்படும் தீ. பழி வாங்க துடிக்கும் குணமுள்ள மனிதர்களின் கொடூர செயல். காட்டுத்தீயினால் ஏற்படும் சேதங்களும், இழப்புகளும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். நம் தலையை நாமே கொள்ளி வைப்பதற்கு சமம். மடி அறுத்த பிறகு பால் கறக்க முடியுமா?
காட்டில் தீ வைப்பதற்கான காரணங்கள்:
1.  காட்டுக்குள் ஆடு,மாடுகள் மேய்ப்பதர்க்கும், விறகு எடுப்பதற்கும் வன துறையும், அரசும் அனுமதி மறுப்பதால், வனத் துறைக்கும், அரசுக்கும் எதிராக பழி வாங்குவதற்காக வைக்கப்படும் தீ (எங்களுக்கு பயன்படாதது, யாருக்கும் பயன்படகூடாது)
2.  காட்டுக்குள் தீ வைத்தால், தீயினால் ஏற்படும் புகை, மேலே சென்று- மேகங்களில் கலந்து மழையாக பொழியும் என்ற தவறான நம்பிக்கை. (இது புகழ் பெற்ற மூடநம்பிக்கை)  
3.  காட்டு ஓரங்களில் பீடி, சிகரெட் புகைபவர்கள் அணைக்காமல் விட்டெரிவது.
இலட்சக்கணக்கான ஆண்டுகளாக பல்லுயிர் துடிப்புடன் உருவாகிய காடுகளை, அது சார்ந்து இருக்கும் உயிரினங்களை, சில மணி நேரங்களில், தீயினால் அழிப்பது, மனிதர்களால் மீட்டு எடுக்க முடியாத பேரிழப்பாகும். மனிதர்களின் பழிவாங்கும் கொடூர செயலையும், அறியாமையும் எப்படி மாற்ற போகிறோம்?  

Sunday, March 25, 2012

நம் நாட்டில் பஞ்சம் இல்லை ஆனால் பட்டினி இருக்கிறதே!!!!

சில தினங்களுக்கு முன் இரவு சுமார் 9 மணி அளவில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தேன். வழக்கமாக பத்து மணிக்கு புறப்படும் நான்,சற்று முன்பாக புறப்பட்டதிற்கு காரணம் வேலை குறைவாக இருந்தது தான், புஷ்பா தியேட்டர் அருகே கீதா மெடிக்கல் வந்த பொழுது வாழை பழம் வாங்க முடிவெடுத்து வண்டியை பஸ் நிறுத்தத்திற்கு அருகில் நிறுத்தி விட்டு வழக்கமாக சில நேரங்களில் நான் வாங்கும் பழ வண்டிகாரரிடம் சென்றேன்.
         பழத்தை வாங்கி கொண்டு இருக்கும் பொழுது, சற்றும் எதிர்பாராத குரல் ஒன்று என்னை திரும்பி பார்க்க வைத்தது. சார் பசிக்குது ஏதாவது வாங்கி கொடுங்க சார்முடி கலைந்த, முகம் சோர்ந்த, மெலிந்த, சுமார் இருபது வயதுடைய வாலிபன் என் முன் நின்று கொண்டிருந்தான். நான் அவனை பார்த்தபொழுது பேசாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தான்.நான் மேலும்,கீழும் உற்று நோக்கினேன் கருத்த உடல்,உணவின்றி,உருக்குலைந்து இருந்தது. அவன் மீண்டும் “சார் பசிக்குது, காலையில் இருந்து சாப்பிடலை ஏதாவது வாங்கி கொடுங்க சார், ‘ஏன்பா ஏதாவது பனியன் கம்பனியில் வேலை செய்ய வேண்டியது தானே? என்று வழக்கமாக பிச்சை எடுப்பவர்களை பார்த்து கேட்கின்ற கேள்வியை கேட்டேன்.
           “சார் யாருமே வேலை இல்லைன்னு சொல்றாங்க, நான் திருப்பூர் வந்து மூணு நாளு ஆச்சு, இருந்த பணம் எல்லாம் செலவாச்சு, வேலை இருந்தா குடுங்க சார், எந்த வேலையா இருந்தாலும் செய்யறேன், நம்பிக்கையாக இருப்பேன், இப்போ பசிக்குது சார், ஏதாவது வாங்கி குடுங்க சார் அவன் சொல்லும் பொழுது என் மனம் கசிந்தது, கண்களில் நீர் கோர்த்தது, உடனே பழ கடைக்காரன் “இந்த மாதிரி பசங்க எல்லாம் பிச்சை எடுக்கிற, புது டெக்னிக் அதை எல்லாம் கண்டுகாதிங்க சார்என்று என்னிடம் கூறி விட்டு- “டேய் இங்கிருந்து கிளம்பு என அந்த வாலிபனை விரட்டினார். நான் குறுக்கிட்டு தம்பி என் கூட வா என அழைத்து கொண்டு நேர் எதிராக இருந்த  ஹோட்டலுக்கு அழைத்து சென்றேன். 
           ஹோட்டல் வாசல் நுழையும் முன் இருந்த கேசியரிடம் இந்த பையனுக்கு சாப்பிட எது வேண்டுமானாலும் குடுங்க பில் நான் தருகிறேன் என கூறிவிட்டு, தம்பி போய் திருப்தியா சாப்பிடு என்றவுடன், அந்த பையனை பார்த்தவுடன், கல்லாவில் உட்கார்ந்து இருப்பவர் “சார், பார்த்து, இந்த மாதிரி பசங்கள நம்பாதீங்க என்றார். நான் கண்டு கொள்ளவில்லை, இதை எல்லாம் சற்று தள்ளி கவனித்து கொண்டிருந்த, பெங்களூர் ஆம்னி பஸ்சுக்காக காத்து கொண்டிருந்த பயணி ஒருவர் ஹோட்டல் முன்பு நின்று கொண்டிருந்த என்னிடம் வந்து “ஹலோ சார் ஒரு நிமிடம், என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தேன்.பருத்த உடல்,வாயில் கிங்ஸ் சைஸ் சிகரெட் புகைந்து கொண்டு இருந்தது. “அந்த பையனை பார்த்தா பிச்சைக்காரனா தெரியவில்லை,நீங்க அந்த பையனிடம் பேசியதை கேட்டு கொண்டு இருந்தேன், நீங்க அந்த பையனுக்கு உணவு வாங்கி கொடுப்பது சரி தான், தப்பாக நினைக்காதீங்க, எனக்கு பெங்களூர் பஸ் புறப்பட தயாராகிவிட்டது, இந்த பணத்தை வைத்து கொள்ளுங்கள் அவன் சாப்பிட்டு முடிந்தவுடன் இதை கொடுத்து விடுங்கள் என 100 ரூபாய் தாளை என்னிடம் நீட்டினார்.
     நான் மறுத்து விட்டு, “சாரி சார், நான் கொடுத்துவிடுகிறேன், நன்றி நான் பார்த்து கொள்கிறேன் உடனே அவர் ஹோட்டல் உள்ளே சென்று காசாளரிடம் அந்த பையனை கை காட்டி அவன் சாப்பிட எது வேண்டுமே கொடுங்கள் மீதி பணத்தை அவனிடம் கொடுத்து விடுங்கள் என 100 ரூபாயை  நீட்டினார் அங்கேயும் நான் தடுக்கவே, பையனிடம் சென்று இதை செலவுக்கு வைத்து கொள் என கட்டாயபடுத்தி கையில் திணித்து விட்டு,வேகமாக கை காட்டி விட்டு எங்கள் கண்களில் இருந்து மறைந்தார். பையன் சாப்பிட்டு விட்டு கையை அலம்பி விட்டு வந்தான், தன்னிடம் இருக்கும் 100 ரூபாய் நோட்டை கடைக்காரனிடம் நீட்டினான், நான் குறுக்கிட்டு அதை நீயே வைத்துகொள், கடைக்காரனிடம் எவ்வளவு என்ற பொழுது “25 ரூபாய் சார்என்றவுடன், 25 ரூபாயை கொடுத்து விட்டு, தம்பி இங்கே வா இப்போ பசி தீர்ந்ததா? இனி என்ன செய்ய போகிறாய்? ஊருக்கா? வேலைக்கா?
          “சார் ரொம்ப நன்றிங்க, நான் ஊருக்கு போயிறேன் சார், பஸ் ஸ்டாண்டு பக்கம் போய் இரவு பஸ் பிடித்து போய் விடுகிறேன் என்றான். எந்த ஊர் என்றேன், மாயவரம் என்றவுடன் பணம் பத்தாது என்று மீண்டும் நான் 50 ரூபாய் கொடுத்தேன் வாங்க மறுத்தான். பணம் போதவில்லை என்றால் நீ ஊர் போய் சேர முடியாது, என கைகளில் பணத்தை திணித்தேன்.பத்திரமாக ஊர் போய் சேர வேண்டும் நாளைக்கு இந்த பக்கம் உன்னை நான் பார்க்க கூடாது, ஊருக்கு சென்றவுடன் என்னை தொடர்பு கொள் என கண்டிப்புடன் கூறி விட்டு,எனது செல்போன் நம்பரை கொடுத்து விட்டு, நான் வீட்டிற்கு கிளம்பினேன். அந்த பையன் பெயர்,விலாசம் கூட கேட்க மனமில்லை. எதற்காக கேட்க வேண்டும்? இது போன்ற நாதி அற்றவர்கள்,இலட்சகணக்கில் தினமும் வெவ்வேறு இடங்களில், திசை மாறி பணம் இல்லாமல்,பசியோடு தவிக்கிறார்கள். இவர்களை கெட்டவர்கள் என எடை போடும் மனித சமூகம், இவர்களை புறக்கணிப்பதால்,பாதிக்கபடுவதால் கெட்டவர்களாக மாற வாய்ப்பு ஏற்படுகிறது. மனிதர்களின் வாழ்க்கை என்ற நிகழ்வோடு, வாழ்வியல் இருத்தலுக்கான போராட்டம் என்ன உறவு கொண்டுள்ளது? ஒரு புறம் உணவு விரயம் மறு புறம் உணவுக்காக திண்டாட்டம், நம் நாட்டில் பஞ்சம் இல்லை ஆனால் பட்டினி இருக்கிறதே,அதே போல் ‘தனி மனிதருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியார் பாடலும்  இருக்கிறது,இருந்தும் தனி மனிதர்களின் பட்டினி தொடர்கிறதே?
    இந்நிலை மற்ற உயிரினங்களுக்கு உண்டா? ‘காக்கை கரைவா கரைந்துண்ணும்’- ‘தான் பசித்திருக்க தன் இணைக்கு நீர் தந்த மான் என்பதெல்லாம் இயற்கை அல்ல அறிவியலும் அல்ல, உணவு போட்டியில் உயிர் இழக்கும் அல்லது உணவை தேடி ஓடும். 
   “தகுதி உள்ளவை, தக்கவை, உயிர் வாழும் எனும் சார்லஸ் டார்வின் கோட்பாடு நினைவுக்கு வந்தது. இந்த பையன் போன்ற மனிதர்கள் தகுதி அற்றவர்களா? தாகாதவர்களா? நாம் ஏன் உதவி செய்ய வேண்டும்? இவர்கள் ஏன் உயிர் வாழ வேண்டும்? எப்படி உயிர் வாழ்கிறார்கள்? டார்வினின் கோட்பாடு மனிதர்களுக்கு பொருந்துமா? நான் வீட்டிற்குள் நுழையும் போது முடிவிற்கு வந்தேன், மனிதர்களை தவிர, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் இந்நிலை பொருந்தாது என கருதுகிறேன்.
மனிதன் அறவியலாலும்,அறிவியலாலும் காக்கபடுகிறான். மனிதர்களை காப்பாற்ற தத்துவகளும்,கோட்பாடுகளும் இருக்கின்றன.உலகத்தில் எந்தவொரு தனி மனிதனுக்கும் உணவில்லை எனில் ஜகத்தை போர்களமாக்கி போர்க்குரல் எழுப்பிய காரல் மார்க்ஸ் தத்துவமும், சாதி, மத பேதங்கள் மூலம் மோதல்களுக்கு எதிராக மனித சமூகத்தை காப்பாற்றும் பெரியாரின் சம தர்ம சமுதாய தத்துவமும் இருக்கும் மட்டும், ‘தக்கவை உயிர் வாழும் கோட்பாடு மனிதர்களுக்கு பொருந்தாது என்றே நினைக்கின்றேன். எனக்கும் அந்த பெங்களூர் பயணிக்கும், பசியால் துடிக்கும் சக மனிதனுக்கு உணவு வாங்கி கொடுக்கும் உந்துதல் ஏற்பட்டதிற்கு மனித நேயமும்,மேலே குறிப்பிட்ட தத்துவங்களும் தான் காரணம் என கருதுகிறேன்.
             அடுத்த நாள் காலை என் செல்பேசி புதிய நம்பருடன் ஒலித்தது, “சார், நான் ஊர் வந்து சேர்ந்து விட்டேன், இனி இங்கேயே வேலை பார்த்துக்கிறேன், சார், கண்டிப்பாக ஒரு நாளைக்கு எங்க ஊருக்கு வாங்க”- ‘சரி தம்பி, மேலும் படிக்க முயற்சி செய் என கூறி தொடர்பை துண்டித்தேன், மனதிற்கு நிம்மதியாக இருந்தது, அன்றைய தினம் முழுவதும் மனம் மகிழ்ச்சியாக இருந்தது.  

நான் சந்தித்த உண்மை சம்பவம், சிந்தனையின் வடிவத்தில் சமர்பிக்கின்றேன்.


அ.மு.அம்சா,
திருப்பூர்.        

Thursday, March 22, 2012

இன்று உலக வன(கானக) நாள் (21-03-2012), காடுகள் பற்றிய அக்கறையும், விழிப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட நாள்.காட்டை பற்றி சிந்தித்தால் நாட்டின் நலன் கூடும்.
காடு நம் பழைய வீடு,உயிரினங்களின் வாழ்விடம்.

காடு உயர நாடு உயரும்,
நாடு உயர மக்கள் வாழ்வு உயரும்,
மக்கள் வாழ்வு உயர மகிழ்ச்சி உயரும்,
மகிழ்ச்சி உயர ஒற்றுமை உயரும்,
ஒற்றுமை உயர்ந்தால் உலகம் உயரும்.